சென்னை மெரீனா கடற்கரையில் கேரளாவைக் கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்-வைகோ, பாரதிராஜா பங்கேற்பு
மே 17 இயக்கம் சார்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நடந்து வருவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று மாலை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, கேரள அரசைக் கடுமையாக கண்டித்தார். மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்த் திரையுலகம் வாய் மூடி மெளனமாக இருப்பதையும் அவர் கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை மெரீனா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மே 17 அமைப்பினர், அதில் இடம் பெற்றுள்ள திரையுலகினர், கலை உலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பல்துறையினர், பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்கவுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயாலளர் வைகோவும் ஒரு அழைப்பை வடுத்துள்ளார். அதில், அவர் கூறுகையில்,
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து சட்டரீதியான உரிமையோடு ஐந்து மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீருக்கும் பெற்று வரும் தண்ணீரை தமிழகம் இழக்கின்ற பெரும் ஆபத்தை ஏற்படுத்த கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பிரச்சினையில் மத்திய அரசு ஓர வஞ்சகமாக கேரளத்திற்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது. அணையை பாதுகாக்கவேண்டிய கடமையை மத்திய அரசும் செய்யவில்லை, உச்சநீதிமன்றமும் செய்யவில்லை. வரும் அபாயத்தை தடுக்கவே தமிழக மக்கள் கொந்தளித்து போராடுகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு நிரந்தர கேடு செய்ய கேரளம் முனைந்தால், விளைவுகள் விபரீதமாகும் என எச்சரிக்கவே பொருளாதார முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட்டது. அணையை உடைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்றும், புதிய அணை கட்டமாட்டோம் என்றும், 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவோம் என்றும் கேரளம் முடிவெடுக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் புதிய புதிய வடிவங்களைப் பெறும்.
அதனால்தான் இன்று சென்னை மெரினா கடற்கரையில் பத்தினித்தெய்வம் கண்ணகி சிலைக்கு அருகில் மாலை 3 மணி அளவில் தமிழக உரிமை காக்கும் உணர்வாளர்கள் மக்கள் திரளாக பங்கேற்க மே 17 இயக்கத்தினரும், கலை உலக விற்பன்னர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
உலகமெல்லாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் திரள்கிறோம். "நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்'' என்றார் இயேசு பெருமான். முல்லைப்பெரியாறில் தமிழ்நாட்டிற்கு நீதி நிலைக்க வேண்டும் என்ற பசி தாகத்தோடு பங்கேற்போம்.
ஆராயாது, தவறான தீர்ப்பளித்த வேந்தனை எதிர்த்து எரிமலையாய் சீறினாள் கண்ணகி. இன்றோ, உண்மையை தெரிந்துகொண்டே அதற்கு மாறாக அநீதி செய்யும் மத்திய அரசை எதிர்க்கவே தமிழகத்தின் சீற்றத்தை காட்ட கடற்கரையில் திரண்டிடுவோம். கட்சி அடையாளங்களையும், கட்சி கொடிகளையும் தவிர்க்க வேண்டுகிறேன் என்று வைகோ அறைகூவல் விடுத்துள்ளார்.