ராஜ்யசபாவில் லோக்பால் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க சமாஜ்வாடி முடிவு?
டெல்லி: ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க சமாஜ்வாடி கட்சியும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 9 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு கட்சிகளில் சமாஜ்வாடிக்கு 5 எம்.பிக்களும், லாலு கட்சிக்கு 4 எம்.பிக்களும் உள்ளனர். இவர்கள் ஆதரவு காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் லோக்சபாவில் லோக்பால்மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது வெளிநடப்புச் செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இதேபோல 18 எம்.பிக்களை ராஜ்யசபாவில் வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்தால் அரசின் நிலைமை கவலைக்கிடமாகி விடும்.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சமாஜ்வாடி, லாலு கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் ஆதரவு காங்கிரஸுக்கு முக்கியமானதாகும். இவர்கள் ஆதரித்து வாக்களிக்காவிட்டாலும் கூட வெளிநடப்பு செய்தால் கூட காங்கிரஸுக்குப் புண்ணியமாகப் போகும். மாறாக எதிர்த்து வாக்களித்தால் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது பெரும் சிக்கலாகி விடும்.
இருப்பினும் பிரணாப் முகர்ஜியை வைத்து இந்தக் கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications