முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக யாரும் உயிர் நீக்க வேண்டாம்- வைகோ வேண்டுகோள்
சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேனி மாவட்டத்தில் சின்னமனூரை சேர்ந்த ராமமூர்த்தி என்னும் இளைஞர் முல்லைப்பெரியாறு அணையைக் காக்க இன்னும் தீர்வு ஏற்படவில்லையே என்று மனம் உடைந்து விஷம் அருந்தி உயிர் நீத்துள்ளார் என்ற செய்தி தாங்க முடியாத மனவேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
உயிர்த் தியாகம் செய்த ராமமூர்த்தியை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது சகோதரர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சி, சாதி, மத எல்லைகளை கடந்து மொத்த தமிழகமும் முல்லைப்பெரியாறை காக்க கிளர்ந்து எழுந்துள்ளது. எனவே, வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முனைய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.