புயல் தாக்கும்போது வீட்டுக் கூரை பிய்த்துக் கொண்டு போகும், மின்சாரம் துண்டிக்கப்படும்- வானிலை மையம்
சென்னை: தானே புயல் கரையைக் கடக்கும்போது என்ன நடக்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் மக்களுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைத் தகவல்:
புயல் காரணமாக வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி, தெற்கு ஆந்திரக் கரையோரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்யத் தொடங்கும். பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்புண்டு.
மழையின் அளவு சில இடங்களில் போகப் போக அதிகரிக்கும். சில இடங்களில் மிக பலத்த மழையை எதிர்பார்க்கலாம். இன்று மாலை முதல் தீவிர மழைக்கு வாய்ப்புண்டு. இந்த மழையானது வடக்கு உள்புறத் தமிழகம் மற்றும் ராயலசீமா பகுதிகளிலும் பெய்யும்.
பலத்த காற்று வீசும்
இன்று காலை முதல் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதன் வேகம் இன்று இரவு முதல் அதிகரித்து மணிக்கு 100-110 கிலோமீட்டர் என்ற அளவுக்கு உயரும். வட தமிழகத்திலும், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளிலும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125 கிலோமீ்ட்டர் வேகத்தி்ல காற்று அதி வேகமாக வீசும்.
1 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள்
கடலில் வழக்கத்தை விட 1 மீட்டர் அதிகமான அளவுக்கு கடல் அலைகள் எழும்பும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் கரையைக் கடக்கும்போது தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகும்.
கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். இன்று இரவு முதல் இந்த கொந்தளிப்பு அதிகரிக்கும். அலைகள் பலமாக எழும். எனவே மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். கடலுக்கு யாரேனும் போயிருந்தால் உடனே திரும்பி விடுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
வீட்டுக் கூரைகள் பிய்த்துக் கொண்டு போகும்
கூரை வீடுகள், ஓட்டு வீடுகளுக்குப் புயல் தாக்கும்போது பலத்த சேதம் ஏற்படும். அவை பிய்த்துக் கொண்டு போகும். மின் இணைப்புகள், தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பதும் நடைபெறக் கூடும். பெரிய மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு விழும். தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வட கடலோரம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும். மீன்பிடி பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications