தானே புயலுக்கு மத்தியில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது- சூறாவளி வீசும்!
சென்னை: தானே புயலின் அச்சத்தில் தமிழகம் இருக்க, இன்று நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற அச்சத்தில் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் மூழ்கியுள்ளனர்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் இன்று பிற்பகலில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் கூடுகிறது. இதில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த சசிகலா அவரது கணவர் நடராஜன் ஆகியோர் உள்பட அவர்களது குடும்பத்தினர் 16 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் இக் கூட்டம் நடப்பது முக்கியத்தும் பெறுகிறது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதலில் செயற்குழு கூடுகிறது. அந்த வளாகத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் இந்த செயற்குழு கூடுகிறது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 250 பேர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றி ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படுகிறது. சிறிது நேரத்தில் இந்த செயற்குழு முடிவடையும்.
அதன்பின்னர் பிரதான பெரிய மண்டபத்தில் பொதுக்குழு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தொடங்குகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார்.
இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் சிலரை பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவதற்கு அழைப்பு விடுப்பார். அவர்கள் கட்சியில் ஜெயலலிதாவால் எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவார். அப்போது அவர் கட்சியிலும், ஆட்சியிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதிரடியாக ஏதாவது அறிவிப்பார் என்று கட்சித் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுக்குழுவில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக பிரமாண்டமான சைவ மற்றும் அசைவ விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications