குறிச் சொல்வதாக பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார் கைது
சிவகங்கை: சிவகங்கையில் குறிச் சொல்வதாக கூறி, கட்டிடத் தொழிலாளரின் மனைவியை பலாத்காரம் செய்த சாமியாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்த திருவேங்கடத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(36). இவர் ஊத்துப்பட்டியில் கோவில் ஒன்றை கட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு குறிச் செல்லி வந்தார்.
இந்த நிலையில் சிறுவூர் கிராமத்தை சேர்ந்த முத்தையா(45), கடந்த சில நாட்களாக காளையார்கோவிலில் உள்ள மாரிமுத்துவின் வீட்டில் வேலை செய்து வந்தார். ஒரு வாரம் வேலை செய்த பிறகு, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவம் பார்க்க சம்பளம் தருமாறு கேட்டார்.
அதற்கு முத்தையாவின் மனைவியை தன்னிடம் அழைத்து வந்து குறிக் கேட்டால், அவரது நோய் குணமாகிவிடும் என்று மாரிமுத்து கூறினார். இதனை நம்பிய முத்தையா கடந்த 27ம் தேதி மனைவி அழகம்மாளுடன்(30), மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்தார்.
அப்போது குறிச் சொல்லுவதற்கு அழகம்மாளை தனி அறைக்கு அழைத்து சென்ற மாரிமுத்து அவரை பலாத்காரம் செய்தார். மேலும் அழகம்மாளின் கழுத்தில் கிடந்த 3.5 பவுன் நகையையும் பறித்து உள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு தனியறைக்குள் சென்று மாரிமுத்துவை தட்டி கேட்டார் முத்தையா. அதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, முத்தையாவை அரிவாளால் தாக்கிவிட்டு, 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து முத்தையா போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், போலி சாமியார் மாரிமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.