தானே புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத கடலூர்-போக்குவரத்து சீரடைகிறது

தானே புயலால் கடலூர் மாவட்டம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இங்கு தற்போது நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அமைசச்ர் மு.சி.சம்பத் தலைமையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா தலைமையில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள், 9 துணை கலெக்டர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
போக்குவரத்துக்கு இடைïறாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரடைந்துள்ளது. பால்விநியோகம் முழுமை அடைந்து விட்டது. நகராட்சி, பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக 20 கிலோ வாட் திறன் கொண்ட 50 ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டு நீரேற்று நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் இறைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 84 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட 4 தாலுக்காக்களில் மின்சார விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணையில் இருந்து 10 டன் கால்நடை தீவனம் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் கடலூர் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் சீரடையும் என்றும் மின்சாரம், குடிநீர் விநியோகமும் ஒரு வாரத்திற்குள் சரியாகும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் அடுத்த வாரம் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. பண்ருட்டி தாலுகாவில், நிரந்தர வருமானம் தரக்கூடிய 15 ஆயிரம் ஏக்கரில் பலா மற்றும் முந்திரி மரங்கள் சேதம் அடைந்தன.
கடலூரில் தொடங்கி சிதம்பரம் வரை கடலோரப்பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களும் புயல் தாக்குதலால் சின்னாபின்னமாகியுள்ளன.
விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமண்ணார்கோவில் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் முற்றிலும் மரங்கள் விழுந்துகிடப்பதால் இன்னும் போக்குவரத்து சீராகவில்லை.
பெரும்பாலான மின்கம்பங்கள் விழுந்துவிட்டதால் 3 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் அத்தியவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
கடலூரில் எந்த பகுதியிலும் மின்சாரம் இல்லை. பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. வெளியூரில் இருந்து வரவேண்டிய காய்கறி, பெட்ரோல், டீசல் போன்றவை வரவில்லை.
ஒன்றிரண்டு பெட்ரோல் பங்கில் மட்டும் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பெட்ரோல் போடுகிறார்கள்.
மின் மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் சப்ளை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறார்கள். அது நகருக்கு போதியதாக இல்லை. எனவே லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதற்காக சென்னை மற்றும் நெய்வேலியில் இருந்து 23 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து 10 லாரிகள் வர உள்ளன. ஆவின் நிறுவனம் நேற்று 2 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்தது. ஆனால் மக்களுக்குத் தேவையான அளவில்லை என்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க மாவட்டம் முழுவதும் 27 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 14 ஆயிரம் பேருக்கு உணவு வளங்கப்பட்டு வருகிறது.
மின்சார துண்டிப்பை சரி செய்ய பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு பகலாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் நகரில் பாதிரிகுப்பம் பகுதியில் இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் கிடைப்பதற்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வரமுடியாததால் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
நாகையில்...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய கடலோர தாலுகாக்கள், புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏற்பட்ட பயிர் மற்றும் பொருட்கள் சேதம் குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகம் தயாரித்து வருகிறது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் புயலுக்கு 2 லட்சம் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.












Click it and Unblock the Notifications