அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.264 கோடி செலவாகும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
அரசின் திட்டப் பணிகளும், வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உதவியாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ‘சி' மற்றும் ‘டி' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாள்கள் ஊதியத்துக்கு இணையாக ஆயிரம் ரூபாய் (உச்ச வரம்புக்கு உள்பட்டு) போனஸ் வழங்கப்படும்.
‘ஏ' மற்றும் ‘பி' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ.1,000 சிறப்பு போனஸும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (முன்னாள் தலையாரி, கர்ணம்) உள்ளிட்டோருக்கு ரூ.500 பொங்கல் பரிசும் வழங்கப்படும்.
2010-11 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரிந்த, மாத ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர சில்லறைச் செலவினப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள், குறு அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு போனஸாக ரூ.1,000 வழங்கப்படும்.
கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும், தினக்கூலிகளாக இருந்து நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கும் சிறப்பு போனஸாக ரூ.1,000 வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.), இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications