மருத்துவமனையில் பெண் டாக்டர் வெட்டிக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் டாக்டரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். அங்குள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி சேதுலட்சுமி. 50 வயதாகும் இவர் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். மேலும் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வந்தார்.
நேற்றிரவு வழக்கம்போல் தனது மருத்துவமனையி்ல் சேதுலட்சுமி இருந்தார். அப்போது திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த பயங்கரத்தை நேரில் பார்த்ததும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். கொலையான டாக்டர் சேதுலட்சுமிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் சேதுலட்சுமி பிரசவம் பார்த்து ஒரு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சேதுலட்சுமியைக் கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.