விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத் ரத்னா விருது- அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சிபாரிசு

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை பெறுவது மிகப்பெரிய கவுரவமாகும். இந்த விருது இந்தியாவின் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்களின் பட்டியலில் முதன் முறையாக தற்போது விளையாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தங்கள் அமைப்பில் சாதனை படைத்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துவருகின்றனர்.
இந்த வரிசையில் உலக செஸ் சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என, சென்னையில் நடைபெற்ற அந்தக் கூட்டமைப்பின், மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெருமைக்குரிய ஆனந்த்
விஸ்வநாதன் ஆனந்த் ஏற்கனவே பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். இந்தியாவில், இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையும் ஆனந்துக்கு உண்டு. அத்துடன் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதையும் முதன் முதலில் ஆனந்த்தான் பெற்றார்.
1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்றது முதல், பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று, உலகின் முதல்நிலை சாம்பியன் என்ற பெயரையும் பெற்றார்.
கிரிக்கெட்டின் கிரான்ட் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கும் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே உச்சகட்டத்தில் இருந்து வருவது நினைவிருக்கலாம். இதை மனதில் வைத்துத்தான் மத்திய அரசும் விதிகளைத் தளர்த்தியது என்றும் ஒரு பேச்சு உள்ளது. இந்த நிலையில் முதல் விருதைப் பெறப் போவது ஆனந்த்தா, சச்சினா என்ற வாதம் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications