சீனாவில் ஒரு வருடமாக சிக்கித் தவித்த 12 குஜராத் வைர வியாபாரிகள் நாடு திரும்பினர்
டெல்லி: சீன சிறையில் கடந்த ஒரு வருடமாக அடைபட்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த 12 வைர வியாபாரிகள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களை மும்பை விமான நிலையத்தில் உறவினர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த 22 வைர வியாபாரிகள் சீனாவில் கைது செய்யப்பட்டனர். 7.3 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரத்தை சீனாவுக்கு கடத்தி வந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹாங்காங்கிலிருந்து இந்த வைரத்தை சட்டவிரோதமாக வாங்கி சீனாவில் விற்க வந்ததாக அவர்கள் மீது புகார் சுமத்தி வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சமீபத்தில் ஷென்ஷென் கோர்ட் இவர்களில் 12 பேர் அப்பாவிகள் என்று கூறி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் மும்பை திரும்பினர்.
22 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் தொடர்ந்து சீன அரசை வலியுறுத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம்.
சமீபத்தில்தான் மும்பையைச் சேர்ந்த இரண்டு இந்திய வியாபாரிகளை, சீனர்களின் பிடியிலிருந்து இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரன் தனது உயிரையும் பணயம் வைத்து மீட்டார் என்பது நினைவிருக்கலாம். அந்த சம்பவத்திற்குப் பின்னர் அடுத்த நாள் இந்த 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications