முல்லை பெரியாறில் புது அணை-ஐவர் குழுவிடம் கேரளா இன்று அறிக்கை தாக்கல்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழுவிடம் வெள்ளிக்கிழமையன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.
கண்ணூரில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணை பலகீனமாக இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணை உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு கூறி வந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழு கூட்டத்தில் முதன் முதலாக புதிய அணை குறித்து பரீசிலிக்கப்பட்டது. இது கேரளா பல ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுபாட்டை யாருக்கு அளிப்பது என்பது குறித்து 6ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர் அதிகார குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்ற குழுவிடம் கேரளா அரசு அறிக்கை தாக்கல் செய்யும். அதில் புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுபாடு தமிழ்நாடு, கேரளா, மற்றும் மத்திய அரசு இணைந்து ஏற்கலாம் என்று தெரிவிக்கப்படும்.
ஏற்கனவே பரப்பிக்குளம்-ஆழியாறு, சிறுவாணி ஆகிய அணைகளும் இதுபோல் தான் தமிழ்நாடு, கேரள கூட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல் புதிய அணை கூட்டுக் கட்டுபாட்டில் செயல்படலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications