ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம்: அடுத்த வாரம் தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை?

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளபட 7 மீது சிபிஐ கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் சிபிஐ வாக்குமூலங்கள் வாங்கியது. மேலும், இது குறித்து தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து மீண்டும் ஆவணங்களை வாங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
தற்போது தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தேவைபப்ட்டால் இது தொடர்பாக மேலும் சில முன்னாள் தொலைத்தொடபுத் துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று கூறப்படுகின்றது.
விசாரணை குறித்து தயாநிதி மாறனுக்கு சிபிஐ விரைவில் சம்மன் அனுப்பவிருக்கிறது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் குறித்த விசாரணை தொடர்பாக மொரீஷியஸ் மற்றும் மலேசியாவில் உள்ள நிறுவனங்களின் விவரங்களை அனுப்பக் கோரி சிபிஐ அந்நாடுகளின் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பவிருக்கிறது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் நடைபெற்றபோது மொரீஷியஸ் நாட்டு நிறுவனம் ஒன்று மலேசிய நிறுவனம் மூலம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பணம் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications