ஊழல்வாதி பகுஜன் சமாஜ் மாஜி அமைச்சரை பாஜகவில் சேர்த்ததற்கு உமா பாரதி எதிர்ப்பு

இதுகுறித்து அவர் கட்சி மேலிடத் தலைவர்களிடம் தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளாராம். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ஊழல் கரை படிந்தவரான குஸ்வாஹாவை பாஜகவில் சேர்த்ததன் மூலம் பாஜகவின் செல்வாக்குக்குப் பெரும் அடி விழுந்துள்ளது. கட்சியின் இமேஜுக்கும் பலத்த சரிவு ஏற்படும். அவரை கட்சியிலிருந்து நீக்காவிட்டால் உ.பியில் நான் தேர்தல் பணிகளில் ஈடுபட மாட்டேன் என்று கூறியுள்ளாராம் உமா பாரதி.
இதுகுறித்து உ.பி. மாநிலத்துக்கான தேர்தல் பிரசாரப் பொறுப்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வியிடம் உமா பாரதி இன்று காலை பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், தனிப்பட்ட காரணங்களுக்காக சில நாட்கள் தன்னால் பிரசாரத்தில் கலந்து கொள்ள முடியாது என்று கூறினாராம். மேலும் இதுகுறித்து நேற்றே கட்சித் தலைவர் நிதின் கத்காரியிடமும் தனது முடிவை சொல்லி விட்டாராம் உமா பாரதி.
உமா பாரதி போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் உ.பி. பாஜகவில் சலசலப்பு கிளம்பியுள்ளது. பிரச்சினையை சரி செய்ய தற்போது களம் இறங்கியுள்ளார் கத்காரி. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் உதவியை அவர் நாடியுள்ளார். உமா பாரதியிடம் பேசுமாறு ஜேட்லியிடம் கோரியுள்ளாராம்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார் உமா பாரதி. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை கட்சித் தலைமையிடம் சொல்லியுள்ளேன். இதுகுறித்து நான் மீடியாக்களிடம் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றார்.
உண்மையில், குஸ்வாஹா கட்சியில் சேர முக்கியக் காரணமே உமா பாரதிதான். ஆனால் ஊழல் புகார்கள் எழுந்து குஸ்வாஹா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததால் உமாபாரதி அப்செட்டாகி விட்டார்.
ஆனால் இதற்கு வேறு காரணம் கூறப்படுகிறது. அதாவது தான் கூறிய நபர்களுக்கு உ.பி. மாநில பாஜக சீட் தரவில்லை என்பதால் அதனால் கோபம் கொண்டு குஸ்வாஹா விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கட்சியை மிரட்டுகிறார் உமா பாரதி என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
மேலும் நேற்று ஹரித்வார் சென்று பாபா ராம்தேவை பார்த்து விட்டு வந்த பிறகுதான் குஸ்வாஹாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் உமா பாரதி என்பதால் அதுகுறித்தும் பலத்த சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன.
ஜனவரி 10ம் தேதி முதல் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் ஊழல்வாதிகளை எதிர்த்துப் பிரசாரம் செய்யப் போவதாக ராம்தேவ் அறிவித்துள்ளார். ஆனால் குஸ்வாஹா பாஜகவில் சேர்ந்துள்ளதால் அவர் அப்செட்டாகியுள்ளாராம்.
குஸ்வாஹாவை கட்சியில் சேர்த்ததால் பாஜகவிலிருந்து மட்டுமல்லாமல் வெளியிலிருந்தும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது பாஜக. குறிப்பாக காங்கிரஸ் கட்சி குஸ்வாஹாவை பாஜகவில் சேர்த்துள்ளதை குறிப்பிட்டு கடுமையாக நக்கலடித்துள்ளது.
அதேபோல சமாஜ்வாடிக் கட்சியும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தியும், பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தவறான முடிவு என்று கூறியுள்ளார் மேனகா.
மொத்தில் குஸ்வாஹாவை பாஜகவில் சேர்த்துள்ளது அக்கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்பதால் இது தேர்தல் பிரசாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கட்சித் தலைமை கவலை கொள்ள ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications