புயல் சேதத்தை மதிப்பிட மத்திய குழு நாளை வருகை: மத்திய அமைச்சர் நாராயணசாமி

தானே புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய அரசு 10 பேர் கொண்ட குழுவை நேற்று அமைத்தது. இதில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால் வளம், குடிநீர், நிதி, சுகாதாரம், மின்சாரம், போக்கு வரத்து, ஊரக மேம்பாடு, நீர்வளத் துறைகளின் பிரதிநிதிகளும், தேசிய பேரிடர் மேலாண்மை, திட்டக்குழு உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவை அனுப்புவது குறித்து தமிழகம் மற்றும் புதுவை அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானே புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் இணைச் செயலாளர் லோகேஸ்ஜா தலைமையிலான 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை அல்லது நாளை மறுநாள் கடலூர், புதுவைக்கு செல்லும். இந்த புயலால் விவசாயிகளும், மீனவர்களும், குடிசைவாசிகளும் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளவும், மீனவர்கள் மீன்பிடி கருவிகள் வாங்கவும், குடிசைவாசிகள் தற்காலிக உதவிகள் பெறவும், நிரந்தரமாக வீடு கட்டவும் தேவையான நிதி வழங்கப்படும். புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட்டு துள்ளியமான அறிக்கையை சமர்பிக்குமாறு மத்தியக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கிடைத்த பிறகே நிவாரண நிதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரிகட்ட ரூ.2,500 கோடி கேட்டு புதுவை அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடி வேண்டும் என்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் நிவாரணத் தொகை குறித்து தமிழகம் எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை.
மத்தியக் குழு இன்று அல்லது நாளை வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு இன்றிரவு அல்லது நாளை இடைக்கால நிவாரணத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும். புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது குறித்து பிரதமரிடம் விரிவாக விளக்கினார். இருப்பினும் தமிழக அரசின் அறிக்கை கிடைத்ததும் இடைக்கால நிவாரண உதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications