இதுதாண்டா போலீஸ்...லஞ்சம் வாங்கி ரசீதும் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'!
சென்னை: சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரூ.1500 லஞ்சம் வாங்கியுள்ளார். வாங்கிய லஞ்சத்துக்கு ரசீது கொடுத்ததால் சிக்கிய அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சட்டக்கல்லூரி காவல் நிலையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜோதிலட்சுமி. டான்பாஸ்கோவின் அழியாத கை சென்னை மக்களின் பார்வைக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் ஜோதிலட்சுமியும் ஈடுபட்டு வந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக அவர் ரூ.1,500 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. மேலும் தான் வாங்கிய லஞ்சப் பணத்திற்காக கையெழுத்து போட்டு ரசீது கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உதவி கமிஷனர் முரளி நடத்திய விசாரணையில் ஜோதிலட்சுமி ரசீது வழங்கி ரூ.1,500 லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து இணை கமிஷனர் செந்தாமரைக் கண்ணன் நேற்று ஜோதிலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஜோதிலட்சுமி பெற்ற லஞ்சப் பணத்தில் பங்கு கிடைக்காத கோபத்தில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொடுத்த புகாரில் தான் அவர் சிக்கியதாகக் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications