அன்னாவின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் பலாத்காரம்-பால் தாக்கரே தாக்கு
மும்பை: அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் பலாத்காரமாகும். அன்னா குழுவைச் சேர்ந்த யாராலும் நாட்டுக்கோ, மக்களுக்கோ ஒரு பிரயோஜனமும் இல்லை என்று காட்டமாக கூறியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் இதழான சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள
பேட்டியில்,
அன்னா ஹஸாரே நடத்திய 5 ஸ்டார், கார்ப்பரேட் உண்ணாவிரதப் போராட்டங்களால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை. அவரது குழுவைச் சேர்ந்த அனைவருமே ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்கள், நாட்டுக்கும், மக்களுக்கும் இவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
கிரண் பேடியாகட்டும், சிசோடியாவாகட்டும், அரவிந்த் கேஜ்ரிவாலாகட்டும், யாருமே லாயக்கில்லாதவர்கள். அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை கிடையாது.
சாதாரண பிரச்சினைக்காக நாட்டையே சூறையாடுவது போல அன்னா குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டம் அமைந்திருந்தது. இதை அரசியல் பலாத்காரம் என்று சொல்வதை விட வேறு எப்படி விமர்சிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
நாட்டுக்கு உண்மையிலேயே லோக்பால் சட்டம் தேவையா என்பதே எனக்குச் சந்தேகமாக உள்ளது. அரசை மோசடி செய்துவிட்டார்கள் அன்னா குழுவினர்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமானால் முன்னாள் மத்திய அமைச்சரான சாந்தி பூஷன் சொத்து வாங்கியபோது ரூ. 1.35 கோடி அளவுக்கு முத்திரைத்தாள் மோசடியைச் செய்துள்ளதை கூறலாம்.
சோனியா, ராகுல் குறித்தும் ரெண்டு வசவு!
சோனியா காந்திக்கு இந்த நாட்டின் மீது என்ன அக்கறை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு இங்கு என்ன வேலை. அவர் இந்த நாட்டைச் சேர்ந்தவரே கிடையாது.
நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ராணுவத் தளபதியின் வயது பிரச்சினையாகி கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. யாருடைய மரியாதை இங்கு காற்றில் பறக்கிறது? நிச்சயம் சோனியாவின் மரியாதை அல்ல, அவர் வெளிநாட்டுக்காரராச்சே.
நேற்றுதான் பிறந்தார் ராகுல். இன்றே பிரதமராகத் துடிக்கிறார். பிரதமர் பதவி என்ன ஏலமா விடப்படுகிறது? நாட்டின் சூழலையே மாசுபடுத்தி விட்டது காங்கிரஸ் என்றார் தாக்கரே.
தாக்கரேவுக்கு ஜனவரி 23ம் தேதி 86 வயது பிறக்கிறது. சரி, உங்களது ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டபோது, அதை நான் பகிரங்கமாக சொன்னால் பிறகு அதை காங்கிரஸார் காப்பி அடித்து விடுவார்கள் என்று சிரித்தபடி கூறினார்.












Click it and Unblock the Notifications