பொருளாதாரத்தை சீரிகுலைக்க பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் கள்ளநோட்டு வினியோகம்
சென்னை: இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் நாடு முழுவதும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் மத்திய அரசு அமைப்பு ஒன்று கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் சோதனை நடத்தியது. இதில் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கூட்டத்தின் தலைவன் மாணிக்ஷேக்கும், அவனது நெருங்கிய கூட்டாளி மார்ஷலும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மாணிக்ஷேக் ஆட்கள் கள்ள நோட்டுகளுடன் இந்தியா முழுவதும் பரவி இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் சென்னையை அடுத்து உள்ள பள்ளிக்கரணையில் கள்ள நோட்டு கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புலனாய்வுப் பிரிவினர் நேற்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பள்ளி்க்கரணை எஸ்களத்தூர் லேபர் காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்கள் போர்வையில் இருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த மண்டல் ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்த கட்டு, கட்டான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்பது தெரிய வந்தது.
இதே போன்று டெல்லியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகிய 4 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ.27 லட்சம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது தெரிய வந்தது.
கள்ள நோட்டு கும்பல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு,
கள்ள நோட்டு கும்பல் இந்தியா முழுவதும் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வந்துள்ளது. பாகிஸ்தானி்ல் அச்சடிக்கப்பட்ட ரூ.1000, ரூ.500 மற்றும் ரூ.100 கள்ள நோட்டுகளை விமானத்தில் எடுத்து வந்து மேற்கு வங்க எல்லையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அதை மார்ஷலும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து பொறுக்கி எடுத்து வந்து நாடு முழுவதும் உள்ள தங்கள் ஏஜெண்டுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வேலையில்லாத இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களை கட்டிடத் தொழிலாளர்கள் போன்று நடித்து இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடச் செய்துள்ளனர்.
மேலும் உள்ளூர் தரகர்கள் மூலம் பெரிய சந்தைகள், மதுக் கடைகள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றியுள்ளனர். அந்த ஏஜெண்டுகள் தங்கள் கமிஷனை எடுத்துக் கொண்டு மீதத்தை அன்த கும்வல் தலைவனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஒரு நல்ல நோட்டுக்கு 3 ரூ.500 கள்ள நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுவும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஒவ்வொரு முறையும் வங்கிக் கணக்கில் ரூ.49,000 மட்டுமே செலுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த கும்பல் கடந்த மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்த கும்பல் தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதே அவர்களின் நோக்கம். மேலும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் அவர்களின் திட்டம்.
இந்நிலையில் கள்ள நோட்டு விவகாரம் குறித்த அனைத்து ஆவணங்களையும் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். மேலும் வங்கியில் நடந்த பணபரிமாற்றம் குறித்த விவரங்களும் பெறப்பட்டுள்ளன. அந்த கும்பலின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications