மத்திய அரசை வலியுறுத்தக் கோரி : ஜெ., மாயா, மமதாவுக்கு கூடங்குளம் போராட்டக் குழு கடிதம்
நெல்லை: அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் செய்யப்பட்டுள்ள அணு ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோருக்கு கூடங்குளம் போராட்டக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். இருப்பினும் அந்த அணுமின் நிலையத்தை திறப்பதில் தான் மத்திய அரசு குறியாக உள்ளது. இந்நிலையில் பிற நாடுகளுடன் இந்தியா செய்துள்ள அனைத்து அணு ஒப்பந்தங்களையும் ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரி கூடங்குளம் போராட்டக் குழுவினர் நாட்டின் பிரபலமான 3 பெண் முதல்வர்கள் அதாவது தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நடக்கவிருக்கும் முதல்வர்கள் மாநாட்டில் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைக்குமாறு அந்த குழுவினர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
அணுமின் நிலையங்களால் இந்திய மீனவர்கள், விவசாயிகள், தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தான் அதிக அளவில் பாதிகப்படுகிறார்கள். நம் நாட்டின் அணு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் இல்லாத, வீணானவை.
கடந்த 63 ஆண்டுகளாக ஏகப்பட்ட பணம், நேரம், மனித வளம் ஆகியவற்றை பயன்படுத்தியும் அணுமின் நிலையங்களால் வெறும் 2.5 சதவீத மின்சாரத்தை தான் உற்பத்தி செய்ய முடிந்தது. நாட்டு மக்களை தாயன்புடன் பார்க்கும் பெண் தலைவர்களாகிய நீங்கள் தான் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
எனவே, நடக்கவிருக்கும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளுடன் இந்தியா செய்துள்ள அணு ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதங்களில் மக்கள் இயக்கத் தலைவர் உதயகுமார் கையெழுத்திட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications