பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்!

குறிப்பாக முந்திரி, பலா மரங்களை இழந்து தங்களது 20 ஆண்டு கால வாழ்க்கையை, உழைப்பை இழந்து தவிக்கும் வன்னிய விவசாயிகள் பெரும் அதிருப்தியுடன் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் வன்னிய மக்களால் நிரம்பிய ஒன்று. பாமகவின் வாக்கு வங்கிகளில் இதுவும் ஒன்று. ஆனால் தானே புயலால் இன்று கடலூர் மாவட்டம் மட்டுமல்ல பாமகவும் சின்னாபின்னமாகி சிதறிப் போகும் ஆபத்து வ்நது விட்டது.
தானே புயலால் சூறையாடப்பட்ட கடலூர் மாவட்டம் சிதிலமடைந்து போயிருக்கிறது. மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிப்புடன் உள்ளனர்.
அவர்களுக்காக உதவ 19 அமைச்சர்களை களம் இறக்கி போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை அதிமுக அரசு முடுக்கி விட்டுள்ளது. திமுகவும் ரூ. 50 லட்சம் நிதியுதவியை அளித்து தனது கட்சியினரை தீவிரமாக நிவாரணப் பணிகளில் இறக்கி விட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் காரிலேயே கடலூர் வந்து மக்களைச் சந்தித்து விட்டுப் போயுள்ளார்.
தேமுதிகவின் பணிகள்தான் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். தன்னால் முடிந்த அளவுக்கு இங்கு தேமுதிகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சி சார்பில் ரூ. 20 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார் கட்சித் தலைவர் விஜயகாந்த். அவரே நேரில் வந்து நிவாரண உதவிகளையும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து விட்டுப் போயுள்ளார். பல இடங்களில் ஜெனரேட்டர்களை இலவசமாக பொருத்தி மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர் தேமுதிகவினர்.
அட, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பச்சமுத்து கூட இந்த மாவட்ட மக்களுக்கு ரூ. 20 கோடி நிதியுதவியை அளித்துள்ளார். ஏன், சாமியார் நித்தியானந்தா கூட உதவிக் கரம் நீட்டியுள்ளார். பெருமளவிலான நிதியுதவியை அளித்துள்ளார்.
ஆனால்..இத்தனை காலமாக இந்த மாவட்ட மக்களின் வாக்குகளில் முத்துக் குளித்து வந்த பாமக இதுவரை ஒரு துரும்பைக் கூட எடுக்க முன்வரவில்லை என்று வன்னிய சமுதாயத்தினர் வேதனையுடன் குமுறல் தெரிவிக்கின்றனர்.
இதுவரை பாமக சார்பில் எந்தவிதமான நிவாரண உதவியும், நிதியும் அறிவிக்கப்படவில்லை என்பது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர்களை கடும் கோபத்திலும், வெறுப்பிலும் தள்ளியுள்ளது. எங்களது வாழ்வே போய் விட்டது. கட்சிதான் நமது அங்கீகாரம், ராமதாஸ்தான் நமது கடவுள் என்ற அளவுக்கு நாங்கள் இத்தனை காலம் இருந்தோம் என்பதே வெட்கமாக உள்ளது என்று இப்போது இந்தப் பகுதி வன்னியர்கள் வெறுப்புடன் கூறுகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் வந்து சுற்றிப் பார்த்து விட்டு அரசு நிவாரணப் பணிகள் சரியில்லை, மத்திய அரசு சரியில்லை என்று பேட்டி கொடுத்து விட்டு வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பிப் போனதோடு சரியாம், அதற்குப் பிறகு இதுவரை ஒரு பைசாவைக் கூட நிவாரண நிதியாக அவர்கள் அறிவிக்கவில்லையாம்.
நமது ஜாதிக்காரர்களுக்குக் கூட ராமதாஸ் உதவவில்லையே என்ற வெறுப்பில் வன்னியர்களும், நாமே இப்படி இருந்தால் எப்படி என்ற வேதனையில் கடலூர் பாமக நிர்வாகிகளும் உள்ளனராம்.
இதனால் பலர் பாமகவை விட்டு விலகுவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான பண்ருட்டி வேல்முருகன் பின்னால் பலர் விரைவில் அணி சேரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications