குளிரால் குழந்தைகள் இறப்பதை அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றம் கண்டனம்

வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிருக்கு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிருக்கு இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் இமாசல பிரதேசத்தின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சிம்லா, கின்னார், சம்பா போன்ற மலைவாசஸ்தலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். காஷ்மீரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியும், பஞ்சாப், உத்தரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடில்லாத மக்களுக்கு பாதுகாப்பு
இதனிடையே கடும் குளிரால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடில்லாதவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு மாநில அரசுகள் வசதி செய்து தரவேண்டும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை எந்த மாநில அரசும் செயல்படுத்தவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர், குளிர்காலத்தில் மக்கள் தலைக்குமேல் கூரை இல்லாமல் உறங்கும் நிலை உள்ளத்தை உருக்குவதாக உள்ளதாக தெரிவித்தனர். குளிரால் குழந்தைகள் இறப்பதை அனுமதிக்ககூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இரவு தங்கும் விடுதிகளில் குடிநீர், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனி கழிப்பிடங்கள், படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள் இந்த மாநிலங்கள் வரும் சனிக்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications