மகாத்மா காந்தியிடம்கோரிக்கை வைத்து 30ம் தேதி ஒப்பாரி வைத்து அழுவோம்-உதயக்குமார்
சென்னை: காந்தி நினைவு தினமான ஜனவரி 30ம்தேதி கூடங்குளம் பகுதியில் அணு மின் நிலையத்தை எதிர்த்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று கூடங்குளும் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்திருந்த அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக நாங்கள் கடந்த 5 மாதங்களாக எழுச்சியுடனும், உறுதியாகவும் போராடி வருகிறோம். இந்த மாதத்தில் இருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்காக 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு தர வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
போகியன்று குண்டு பல்புகள் அகற்றம்
இந்த கோரிக்கைளை வலியுறுத்தி, போகிப் பண்டிகை அன்று குண்டு பல்புகளை அகற்றிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக சி.எஸ்.எல். பல்புகளை பொருத்தும் போராட்டம் நடைபெறும்.
25ம் தேதி ஆர்ப்பாட்டம்-26ல் பேரணி
வரும் 22-ந் தேதி திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டமும், 26-ந் தேதி பெருமணல் கிராமத்தில் இருந்து செட்டிகுளம் கிராமம் வரை ஊர்வலமாக சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
காந்தியிடம் சொல்லி அழுவோம்
தந்தையிடம் கோரிக்கை வைத்து அழுவது நம்முடைய கலாச்சாரம். அதுபோல நம் தேசத் தந்தையான மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ந் தேதி கூடங்குளம் பகுதியில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
எங்களது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொல்லி, ஆதரவு தரக் கோரி பெண் முதல்வர்களான தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.
கூடங்குளம் அணு மின்நிலையத்திற்குள் ரகசியமாக பணிகள் நடக்கிறதோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை.
கூடங்குளம் அணு மின்நிலையம் மட்டுமல்லாமல் கல்பாக்கம் அணு மின் நிலையம், தேனியில் அமையவுள்ள நிïட்ரினோ திட்டத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியாவிலே அணு மின் நிலையம் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது கொள்கை.
எங்களது போராட்டம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். எங்களது போராட்டக் குழுவினர் வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிவிட்டதாக பொய் பிரசாரம் செய்பவர்கள், அதுகுறித்து விசாரித்து, கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கலாமே! எங்களது போராட்டத்திற்கு உள்ளூர்காரர்களும், பீடித் தொழிலாளர்களும், உள்ளூர் மீனவர்களும் தாமாக முன் வந்து நன்கொடை அளிக்கிறார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications