காவிரி ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
சென்னை: காவிரி ஆற்றிலும், ஏரியிலும் நீரில் மூழ்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ஆற்று வெள்ளத்தில் 7 பேர்
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையத்திலுள்ள பவானி கட்டளை கதவணை நீர்மின் நிலையத்தினை அடுத்துள்ள காவிரி ஆற்றில், ஈரோடு மாநகர், சாஸ்திரி நகரைச் சேர்ந்த 9 நபர்கள் காவிரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் விடுமுறையைக் கழிக்கச் சென்றனர்.
அப்போது, பவானி கட்டளை கதவணை நீர்மின் நிலையத்தில் இருந்து கடந்த
8-ந் தேதி வெளியேற்றப்பட்ட நீரினால் அடித்து செல்லப்பட்டு, 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்துயரச் சம்பவத்தில் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து துயர் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இத்துயர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
ஏரியில் மூழ்கிய சிறுவர்கள்
இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, மயிலம்பாடி கிராமம், கண்ணடிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன்கள் கோகுல், வினோத் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் கடந்த 8-ந் தேதி கண்ணடிபாளையம் ஏரியில் விளையாடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த விபத்தில் அகால மரணமடைந்த சிறுவர்கள் கோகுல், வினோத், மோகன்ராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.












Click it and Unblock the Notifications