அங்கீகாரம் இல்லாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சான்றிதழ் செல்லாது-சுப்ரீம் கோர்ட்
டெல்லி: அங்கீகாரம் இல்லாத தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையங்களின் சான்றிதழ்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தகைய படிப்புகளுக்கு தேசிய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்தை கல்வி நிறுவனங்கள் பெறுவது அவசியம் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் சான்றிதல் குறித்து நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலோ, அல்லது புதிய நிறுவனங்களின் அங்கீகாரம் நிராகரிக்கப்பட்டாலோ, மேல்முறையீட்டு மனுவின் பேரில், உயர்நீதிமன்றங்கள் தற்காலிக அனுமதி தரக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவற்றின் கல்வி்த்தரம், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை கவுன்சிலின் மண்டலக் குழுக்கள் ஆய்வு செய்வது கடமை என்றும், நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அங்கீகாரம் இல்லாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் படிப்புகள், மத்திய, மாநில அரசுகளின் பணிக்கும், கல்வி நிலையங்களின் பணிக்கும் தகுதியானதாக கருத முடியாது என்றும், அத்தகைய பயிற்சி நிலையங்களின் சான்றிதழ்கள் செல்லாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications