பசுபதி பாண்டியன் உடல் அடக்கம்-பயங்கர வன்முறை-போர்க்களமானது தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள், கட்டைளுடன் எதிர்ப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் தாக்கி சேதப்படுத்தினர். பொதுமக்களை தாக்கினர். அரசு அலுவலகங்கள், கடைகள் என வழியில் தென்பட்ட எதையும் விடவில்லை. இதனால் தூத்துக்குடி நகரமே பெரும் போர்க்கள பூமி போல காணப்பட்டது.

திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் தலித் தலைவரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இது தென் மாவட்டங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் பசுபதி பாண்டியனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அதை சொந்த ஊரான தூத்துக்குடி, அலங்காரத்திட்டைக்குக் கொண்டு வந்தனர். நேற்று இரவு எட்டரை மணியளவில் உடல் வந்து சேர்ந்தது.

முன்னதாக தூத்துக்குடியிலிருந்து அலங்காத்திட்டக்கை உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது பெரும் வன்முறையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் இறங்கினர்.

பயங்கர ஆயுதங்கள், நீண்ட கட்டைகள், உருட்டுக் கட்டைகள், பெட்ரோல் கேன் சகிதம் வந்த அவர்கள் வழியில் தென்பட்டதையெல்லாம் அடித்து உடைத்தனர். ஊர்வலம் வருகிறதே என்பதற்காக சாலையோரம் வண்டிகளை நிறுத்தி விட்டு காத்திருந்த இரு சக்கர வாகனங்கள் அத்தனையும் அடித்து நொறுக்கப்பட்டன. கார்கள் நொறுக்கப்பட்டன. தடுத்தவர்கள் தாக்கப்பட்டனர். செருப்புகளை வீசி அவர்களைத் தாக்கினர்.

பூட்டப்பட்டிருந்த கடைகள், ,அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் என எதையும் அவர்கள் விடவில்லை. அனைத்தையும் தாக்கி சேதப்படுத்தினர். வழியெல்லாம் வாகனங்கள் தாக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். இதனால் பழைய பஸ் நிலையப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்து அவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்தி விட்டனர்.

அப்படியிரு்ந்தும் வன்முறை ஓயவில்லை. போலீஸ் பூத் ஒன்றை வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மக்களை பெரும் மிரட்சிக்குள்ளாக்கி விட்டது இந்த வன்முறையுடன் கூடிய இறுதி ஊர்வலம்.

பொதுமக்கள் பலரும் இந்த வன்முறை ஊர்வலத்தில் காயமடைந்தனர். பத்திரிக்கையாளர்கள், போலீஸார் என யாரும் காயத்திலிருந்து தப்பவில்லை.

தூத்துக்குடி நகரையே கிட்டத்தட்ட சூறையாடிய நிலையில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது பசுபதி பாண்டியனின் உடல். அங்கு அவரது உடலுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஐ.ஏஎஸ் அதிகாரி உமாசங்கர் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் பசுபதி பாண்டியனின் உடல் அவரது மனைவி ஜெசிந்தாவின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+