அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மிகப் பெரிய மகா ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றுதான் இந்த எமிரேட்ஸ் பாலஸ் ஹோட்டல். பிரமாண்டமான அரண்மனை போல இது காணப்படும். இந்த ஹோட்டலின் எல் எடாய்ல்ஸ் நைட் கிளப் வெகு பிரசித்தமானது. இந்த நைட் கிளப்புக்கு ஜனவரி 4ம் தேதி ஒரு பெரிய கோடீஸ்வரர் வந்துள்ளார். இரவு முழுக்க கிளப்பில் செலவிட்ட அவர் அங்கிருந்து கிளம்பிப் போனபோது, பில் பணமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 56 திர்ஹாம் பணத்தை கட்டணமாக கட்டி விட்டு போயுள்ளார். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 70 லட்சமாகும்.
அந்த கோடீஸ்வரர் யார், என்ன என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து நைட் கிளப்பின் பார் மேலாளராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்தவரான சுஜீத் பிள்ளை கூறுகையில், பில்லை யார் கட்டியது என்ற விவரத்தை நாங்ள் பொதுவாக கூறுவதில்லை. மேலும் இது எங்களுக்கு ஆச்சரியமான தொகையும் அல்ல. இங்கு இது சகஜமானதுதான். மேலும் வந்த நபர் யார் என்ற விவரம் எங்களுக்கும் கூட தெரியாது என்றார்.
பதினைந்து நாட்களுக்கு முன்புதான் துபாயின் தி பேர்மான்ட் ஹோட்டலில் உள்ள கவாலி கிளப்புக்கு வந்த ஒரு மெகா கோடீஸ்வரர் 3 லட்சத்து 87 ஆயிரத்து 988 திர்ஹாம் அளவுக்கு செலவு செய்து விட்டுப் போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இப்படிப்பட்ட செலவுகள் இதுபோன்ற ஹோட்டல்களில் சகஜம்தான் என்றாலும் இந்த மகா ஆடம்பர செலவு குறித்து பலர் டிவிட்டர்கள் மூலமும் பேஸ்புக் மூலமும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications