மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம்: தங்கர் பச்சான் அறிவிப்பு

தானே புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், பாதிப்பில் இருந்து மீளும் வரை கடலூரில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், பள்ளிக் குழந்தைகளு்ககு காலை உணவு வழங்கி அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் முன்னேற்றக்கழகம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கழகத்தின் பொதுச் செயலாளர் அதியமான் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குனரும், அனைத்து ஊழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மாநிலத்தில் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் இருப்பது இந்த ஆட்சிக்கு தான் தலைக்குனிவு. மூளை இருந்தால் தானே ஒருவன் சிந்திக்க முடியும். இந்த மது அதை இல்லாமல் செய்துவிடுகிறது. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கிறான். இதனால் பெண்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
கடந்த ஆட்சியாளர்கள் உணர்ச்சிப்பூர்வமான மக்களை உருவாக்கவில்லை, சிறந்த கல்வியையும் அளிக்கவில்லை. மாறாக மதுவை கொடுத்து சிந்தனையை மாற்றிவிட்டனர். மது பாட்டிலில் அது உயிருக்கு கேடு, வீட்டுக்கு கேடு, நாட்டுக்கு கேடு என்று குறிப்பிட்டப்பட்டுள்ள போதிலும் அதை ஏன் விற்பனை செய்ய வேண்டும்.
தானே புயலால் நிஜமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணத் தொகை அந்த குடும்பங்களுக்கு போய் சேரவில்லை. நேராக டாஸ்மாக் கடைக்கு தான் செல்கின்றது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க ஆவண குறும்படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்துள்ளேன். அடுத்த கட்டமாக மதுக்கடைகளின் முன்பு மிக்ப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன். இளைஞர்கள் இனியும் சும்மா இருக்கமாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications