எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: ஜெயலலிதாவிடம் ரூ.4.64 கோடி கட்சி வளர்ச்சி நிதி வழங்கிய அமைச்சர்கள்

தலைமைக் கழகத்துக்கு வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த அவர், பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மாநில மீனவர் அணி செயலாளர் கலைமணி பெற்றுக் கொண்டார். நிர்வாகிகளுக்கு இனிப்பும் வழங்கினார்.
தொடர்ந்து நடந்த விழாவில், 'வீடியோ கான்பரசிங்' மூலம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிதி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், பழனியப்பன் ஆகியோர் தலா ரூ. 1 கோடியே 6 லட்சம் வழங்கினர். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் தலா ரூ. 1 கோடியும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை செயலாளருமான ரவீந்திரன் ரூ. 52 லட்சமும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர்கள் சுலோசனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச். பாண்டியன். அமைச்சர்கள், அதிமுக எம்.பிக்கள் பாலகங்கா, சென்னை மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், நடிகர் ராமராஜன், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமைக் கழகம் கொடிகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வழி நெடுக பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
அமைச்சர்கள் மரியாதை:
அதே போல எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications