அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பணம்: என்ஜிஓ நிறுவனங்களில் உள்துறை அதிகாரிகள் ரெய்டு
தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கு பணம் கிடைத்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி தொண்டு நிறுவனங்களில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூடக்கோரி மீனவ கிராமத்தினரும் அணு உலை எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொண்டு நிறுவனங்கள் முன்னின்று நடத்தி வருவதாகவும், இதற்கு பல வெளிநாடுகள் நிதி உதவி செய்து வருவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த முடிவு செய்தது.
இதற்காக உள்துறை இணைச் செயலாளர்கள் ஜோகிந்தர்சிங் மற்றும் பிரசாத் ஆகிய இரு அதிகாரிகள் தலைமையிலான தணிக்கை குழு துத்துக்குடி வந்துள்ளது. அவர்கள் அனு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் குறித்து கணக்கெடுத்து அவற்றின் வருவாய் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் துத்துக்குடியைச் சேர்ந்த 5 முன்னணி தொண்டு நிறுவனங்கள் குறித்து தணிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர், இதில் துத்துக்குடி ரெயில் நிலைய ரோட்டில் அமைந்துள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் குழு செவ்வாய்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டது.
மேலும் அந்நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளதாக கூறப்படும் ரூ.45 கோடி பணத்திற்கான கணக்கு வழக்குகளை அதிகாரிகள் குழு தணிக்கை செய்தது. இந்த சோதனையின்போது மேலும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த தொண்டு நிறுவனங்களின் கிளைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் துத்துக்குடியில் அணுஉலை எதிர்பாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அகதிகள் முகாமிலும் ஆய்வு
தொடர்ந்து தூத்துக்குடி தாளமுத்துநகர் ராம்தாஸ்நகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மறைமாவட்ட அமைப்புகளின் சார்பில் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டனர். அங்கு கட்டப்பட்டு உள்ள கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகளையும் பார்த்தனர். வியாழக்கிழமையன்றும் சோதனை நீடிக்கின்றது.
மத்திய அரசு காழ்ப்புணர்ச்சி
இந்த நிலையில் சோதனை என்ற பெயரில் போராட்டத்தை களங்கப்படுத்த முயற்சி நடப்பதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கூடங்குளம் அனுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்த புஷ்பராயன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய அரசு சரியான பதிலளிக்க முடியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்த தணிக்கை கூடங்குளம் எதிர்பாளர்களை ஜனநாயக முறையில் போராட விடாமல் தடுத்து மக்கள் மத்தியில் தொண்டு நிறுவனங்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்றார்.
மக்கள் போராட்டம்
இந்த சோதனை குறித்து தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் முழுக்க முழுக்க மக்களே முன் நின்று நடத்துகிற போராட்டம் ஆகும். அதற்கு தேவையான நிதி ஆதாரத்தை அவர்களே உருவாக்கி கண்காணித்து நடத்துகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு பிரசாரத்துக்காக வெளிநாடுகளில் இருந்து எந்த நிதியும் பெறப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து பிற திட்டங்களுக்காக பெறப்பட்ட எந்த நிதியும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மறைமாவட்ட அலுவலகத்திலும், 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தூத்துக்குடி சமூகசேவை அலுவலகத்திலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் 2 பேர் கள ஆய்வு மேற்கொள்வதாக முன்அறிவிப்பு கொடுக்கப்பட்டது. தற்போது கள ஆய்வு முறையாக நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிஷப் இவோன் அம்புரோஸ் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க முடிவு
இதனிடையே மத்திய அரசின் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி, சோதனையில் கிடைக்கும் ஆவணங்களைப் பொருத்து அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு பணம் புகுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications