'பன்ச்' தலைவியாக மாறிய பஞ். தலைவி-ரவுடிளை விட்டு அடிப்பதாக கிராமத்தினர் புகார்!
விழுப்புரம்: மக்கள் ஏதாவது கேட்கப் போனால், குறை கூறினால் ரவுடிகளை வைத்து அடித்து உதைக்கிறார். எங்களது கிராமத்தையே கலவர பூமியாக மாற்றி விட்டார் என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவி மீது ஊர் மக்கள் ஒட்டுமொத்தமாக புகார் கூறியுள்ளனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது சேமங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிமேகலையை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர்.
அதில், சேமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தனம், அவரது மகன் தசரதன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து எங்கள் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2010-11ம் ஆண்டு ஊராட்சி நிதியில் ரூ.2,35,450 கையாடல் செய்துள்ளனர். ஏழை மக்களுக்கு இலவசமாக கொடுத்த மனை பட்டாவை மிரட்டி எழுதி வாங்கி வீடு கட்டியுள்ளனர். ரவுடிகளை வைத்து மிரட்டி சேமங்கலம் கிராமத்தை கலவர பகுதியாக மக்கள் அச்சமுடன் வாழும் நிலைக்கு மாற்றியுள்ளனர்.
பொங்கல் தினத்தில் குடிபோதையில் வந்த ரவுடிகள் பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் கத்தி, தடியை கொண்டு எங்களை அடித்து உதைத்தனர். அதில் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இன்னும் பல ரவுடிகள் எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே கலெக்டர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
பஞ்சாயத்துத் தலைவி மீது ஊர் மக்கள் ஒட்டுமொத்தமாக புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications