பேச்சுவார்த்தை தோல்வி- சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்கிறது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் 26வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் 23ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9ம் தேதி சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நெல்லை ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
நேற்றுமுன்தினம் பயணியர் விடுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் அமைச்சர் செந்தூர் பாண்டியன் நடத்திய பேச்சு வார்த்தையிலும் தகுந்த தீர்வு காண முடியவில்லை. இதனால் நேற்று 25வது நாளாக விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இன்று 26வது நாளாக ஸ்டிரைக் தொடர்கிறது.
விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பாடப்பிள்ளையார் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராததை கண்டித்தும், அரசின கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பாலபாரதி எம்.எல்.ஏ. தலைமையில் சிஐடியூ மாவட்ட செயலாளர் மோகன் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலையில் வரும் 23ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications