பிரதமராக தகுதி உள்ளவர் நரேந்திர மோடி தான்-கத்காரி
டெல்லி: என்னால் பிரதமர் பதவிக்குப் போட்டியிட முடியாது. அதற்கான தகுதி எனக்கு இல்லை. ஆனால் நரேந்திர மோடிக்கு அத்தனை தகுதிகளும் உள்ளன. அவர்தான் இதற்குப் பொருத்தமானவர் என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னால் பிரதமர் பதவிக்கு ஒருபோதும் போட்டியிட முடியாது. அதற்கு நான் பொருத்தமானவன் இல்லை. இதனால் அநத்ப் பதவிக்கு நான் யாருடனும் போட்டியிடவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி திறமையானவர், தகுதியானவர், பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவரும் கூட.
பாஜக தலைவராக எனது பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதை நீடிக்க நான் விரும்பவில்லை. சாதாரண தொண்டராக கட்சிக்குப் பணியாற்ற நான் விரும்புகிறேன். கட்சித் தலைவர் பதவியை நரேந்திர மோடி ஏற்றுக் கொள்ள நான் ஆதரவு தெரிவிப்பேன்.
அதேசமயம், பாஜக என்பது வாரிசுகளைத் திணிக்கும் கட்சி அல்ல, யாரையும் அது நியமிக்காது. கட்சியின் ஒட்டுமொத்த கருத்துக்களையும், ஆதரவையும் பெறும் தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
என்னைப் பொறுத்தவரை பாஜக தலைவராகவும், பிரதமராகவும் சிறப்பாக செயல்படக் கூடிய தகுதி மோடிக்கு உண்டு.
உமா பாரதி உ.பி தேர்தலில் போட்டியிடுவதை பிரச்சினையாக்குவது தேவையில்லாத ஒன்று. இத்தாலியைச் சேர்ந்த சோனியா காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட முடியும்போது ஏன் உமா பாரதியால் போட்டியிட முடியாது?.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 சீட்களைப் பெற வேண்டும். இது ஒரு மிகப் பெரிய சவால். ஆனால் சவாலை சந்திக்க நாங்கள் தயார் என்றார் கத்காரி.












Click it and Unblock the Notifications