மும்பை மாநகராட்சியில் 'குப்பை' கொட்டப் போவது யார்?-ரூ. 5000 கோடிக்கு பெட்!
மும்பை: மும்பை மாநகராட்சித் தேர்தலில் யார் வெல்வார்கள், யார் நிர்வாகத்தைக் கைப்பற்றுவார்கள், எந்தக் கட்சி கையில் மும்பை மாநகராட்சி போகும் என்பது குறித்து ரூ. 5000 கோடி அளவுக்கு பெட் கட்டப்பட்டு சூதாட்டம் படு சூதானமாக நடந்து வருகிறதாம்.
முன்பெல்லாம் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் பெட் கட்டி சூதாடி வந்தார்கள். இப்போது எதற்கெடுத்தாலும் சூதாட்டமாகி விட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன பிள்ளை பிறக்கும் என்பதற்குக் கூட பெட் கட்டி பிரமாதப்படுத்தினார்கள். அதை விட காமெடியாக, மும்பையில் இந்த ஆண்டு எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதற்குக் கூட பெட் கட்டி பிரளயத்தை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பெட் கட்டி கலக்குகிறார்களாம். ரூ. 5000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடக்கிறதாம். பிப்ரவரி 16ம் தேதி மும்பை மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
புக்கிகளின் தற்போதைய கருத்துப்படி, எந்தக் கட்சிக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா மற்றும் இந்திய குடியரசுக் கட்சி ஆகியவை மாநகராட்சியை அடுத்து ஆட்சி செய்யப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாக விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மும்பை மாநகராட்சியைக் கையில் வைத்துள்ள சிவசேனா மற்றும் பாஜகவுக்கு நிலைமை சாதகமாக இல்லை என்கிறார்கள்.
சிவசேனாவுக்கு 80 சீட்கள் கிடைக்கும் என்று அதிகம் பேர் பெட் கட்டியுள்ளனராம். பாஜகவுக்கு 30 சீட்கள் கிடைக்கும் என்று அதிகம் பேர் கூறியுள்ளனராம்.
மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு 25 சீட்கள் வரை கிடைக்கும் என்று பலர் பெட் கட்டியுள்ளனராம். மும்பை மாநகராட்சியில் ஆட்சியைப் பிடிக்க தேவையான பெரும்பான்மை பலம் 114 ஆகும்.
அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு 75 முதல் 80 சீட்கள் வரை கிடைக்கும் என்பது புக்கிகளின் கணிப்பாகும். தேசியவாத காங்கிரஸுக்கு 20 கிடைக்கலாம் என்றும் சிவசேனாவுக்கு 75 வரை கிடைக்கலாம் என்றும் பாஜகவுக்கு 25 வரை கிடைக்கலாம் என்றும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு 15 வரை கிடைக்கலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
மொத்தம் ரூ. 5000 கோடி அளவுக்கு புக்கிங் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.