துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி: போலீஸ் தீவிர விசாரணை
சேலம்: துபாயில் உள்ள சாக்லேட் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரியும் 30க்கும் மேற்பட்டோர் சேலம் எஸ்பியிடம் புகார் கொடுத்தனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சேலம் எஸ்பி எம்.எஸ். முத்துசாமியை நேற்று நேரில் சந்தித்து புகார் கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த புகார் மனுக்களில் கூறியிருப்பதாவது,
சேலம் மாவட்டம், ஓமலூர், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ரிஸ்வான் (40). இவர் துபாயில் உள்ள பாச்சி சாக்லேட் என்ற நிறுவனத்துக்கு கணக்காளர், பொருள் பாதுகாவலர், ஏ.சி. பழுது நீக்குபவர் உள்பட பல்வேறு வேலைகளுக்கு ஆள்கள் தேவை என்றும், அதற்கு நல்ல சம்பளம் வாங்கித் தருவதாகவும் கூறினார்.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் வேலைக்கு ஏற்றாற்போல் ரூ.50,000, ரூ.1 லட்சம், ரூ.1.25 லட்சம் என்ற வீதத்தில் பணமும், பயணச் சீட்டு வாங்க வேண்டும் எனக்கூறி ஒவ்வொருவருடைய பாஸ்போர்ட்டையும் சீட்டையும் பெற்றுக் கொண்டார்.
ஜனவரி மாதம் 23ம் தேதி துபாய் செல்ல வேண்டும். தயாராக இருங்கள் எனக் கூறி விமானப் பயணச்சீட்டை வழங்கினார். ஆனால் துபாய் செல்வதற்கான ஏற்பாட்டை அவர் செய்யவில்லை.
சந்தேகமடைந்த நாங்கள் ஒவ்வொருவருடைய பயணச்சீட்டுகளைச் சோதித்தபோது அது ஒரே வரிசை எண் கொண்டவையாக, பெயர் மட்டும் மாறி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாங்கள் கடந்த வாரம் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் துபாய் சென்றுவிட்டதாக அவரது மனைவி, உறவினர்கள் தெரிவித்தனர்.
எனவே, போலீசார் விசாரணை நடத்தி எங்கள் பணத்தையும், பாஸ்போர்ட்டையும் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications