நிலத் தகராறு: பங்காளி வீட்டுக்கு மனித வெடிகுண்டாக சென்ற சீனர்-5 பேர் பலி!
பீஜிங்: சீனாவில் தனது சகோதரர் முறை வரும் நபரின் வீட்டுக்குள் புகுந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
சீனாவின் ஹ்யூனன் மாகாணத்தில் உள்ளது டீலூ என்ற கிராமம். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணி அளவில் லியாவ் என்றவர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தனது பங்காளி வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது பங்காளி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் சீன புத்தாண்டையொட்டி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது லியாவ் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் லியாவ் உள்பட அனைவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். லியாவ் பல ஆண்டுகளாக ஒரு நகரில் பணிபுரிந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் கிராமத்திற்கு வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
சீனாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடப்பது அரிது. இந்நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications