பித்தளை சிலைகளை ஐம்பொன் என்று கூறி விற்க முயன்ற 4 பேர் கைது
சுரண்டை: சுரண்டை அருகே பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலைகள் என்று கூறி அதை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயன்ற ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுரண்டை அருகேயுள்ள கம்பிளியைச் சேர்ந்தவர் சுப்பு. அவரது மகன் பிச்சையா. மெக்கானிக். அவரிடம் 4 பேர் தங்களிடம் விலை உயர்ந்த காமாட்சியம்மன், பூமாதேவி ஆகிய ஐம்பொன் சிலைகள் உள்ளன. இதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் சகல ஐஸவர்யங்களும் கிடைக்கும் என்று கூறி 2 சிலைகளுக்கும் ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் சாம்பவர் வடகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஏட்டு செல்வகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கொண்டு வந்த இரு சிலைகளும் பித்தளையில் செய்யப்பட்டவை என்றும் அதன் மதிப்பு ரூ.20,000 என்றும், அவர்கள் சங்குளம் மெயின்ரோடு பால்ராஜ் மகன் ஆட்டோ டிரைவர் தங்கராஜ், மேக்கரை சிவசுப்புரமணியன், வேலாயுதபுரம் ஆறுமுகச்சாமி, மீனாட்சிபுரம் சாமிராஜ் மகன் திருமலைச்சாமி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அந்த 2 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications