கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்:ஆதரவு இயக்க தலைவர் வலியுறுத்தல்
நெல்லை: நாட்டில் நிலவி வரும் மின்தட்டுபாட்டை போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணு மின் நிலைய ஆதரவு இயக்க தலைவர் விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்திய-ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தின்படி நாட்டின் வளர்ச்சிக்கு மின் தட்டுபாட்டை போக்க பாதுகாப்பாகவும், நவீன தொழில்நுட்பத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அணு உலையை மூட வலியுறுத்தி எதிர்ப்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் களம் இறங்கி நிற்பது வேதனைப்படக்கூடிய ஒன்று.
அணு உலைகளால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதித்துவிடும் என்ற பொய்யான தகவலை எதிர்ப்பாளர்கள் பரப்பி வருகின்றனர். இந்தியாவில் 20 அணு உலைகள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சென்னை கல்பாக்கம் அணு உலை கட்டப்பட்டு இதுவரை எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கலாம். அணுக் கழிவுகளை அதிவேக ஈணுலைகள் மூலமாக மறுசுழற்சி செய்து மின்சாரம் தயாரிப்பதால் கூடங்குளம் அணு உலைக் கழிவு தவிர்க்கப்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் காலம் கடத்தாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications