கேரளாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை: காங். எம்பியே கூறுகிறார்
வேலூர்: கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மற்றும் பீர்மேடு ஆகிய தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆரூண் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட தேசிய கிருஸ்துவப் பேரவை சார்பில் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. வேலூரில் நடந்த இக் கருத்தரங்கில் பங்கேற்ற ஆரூண் நிருபர்களிடம் பேசுகையில்,
இங்கிலாந்தைச் சேர்ந்த பென்னி குயிக் இந்தியாவின் கடைக் கோடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டும்போது தனது சொத்துக்களையெல்லாம் விற்று 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருந்தார்.
இந்த அணையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த அணை உடையவும் உடையாது, அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால் அந்த அணை உடைந்து விடும் என்றும் எனவே வேறு அணையை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் திட்டமிட்ட பொய்ப் பிரசாரமாகும்.
முல்லை பெரியாறு பிரச்சனையை நான் கண்டு கொள்ளவே இல்லை என்பது தவறு. நான் அடிக்கடி எனது தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து வருபவன்.
கேரளாவில் உள்ள இடுக்கி மற்றும் பீர்மேடு பகுதியில் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். எனவே அவர்களிடம் இந்தப் பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் கேரள மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications