சென்னை வங்கிக் கொள்ளை- 3 கொள்ளையர்களின் வரைபடங்கள் வெளியீடு
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கியில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்களின் கம்ப்யூட்டர் வரைபடத்தை போலீஸார் வெளியிட்டு அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மொத்தம் நான்கு பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வட மாநில கட்டுமானத் தொழிலாளர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கியில் கொள்ளையடித்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் கூறிய அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டர் உதவியுடன் 3 பேரின் வரைபடங்களை போலீஸார் தயாரித்துள்ளனர். இவற்றை இன்று காவல்துறை வெளியிட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் இதைப் பிரதிகள் எடுத்து ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஒட்டியுள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் குறித்த அடையாளம், தகவல் தெரிந்தோர் 9884203821 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என போலீஸார் அறிவித்துள்ளனர்.
தகவல் தெரிவிப்போரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
4 ஊழியர்கள் மாயம்-கொள்ளையர்களா?
இதற்கிடையே துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களைக் காணவில்லை என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் கொள்ளைச் சம்பவம் நடந்த நாளிலிருந்து காணவில்லை என்று துரைப்பாக்கம் போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கும் கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications