ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்-வங்கிக் கொள்ளை நடந்த துரைப்பாக்கத்திற்கு ஏசி ஆனார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்த டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துரைப்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இடம் பெற்றிருந்தவர் பாலசுப்பிரமணியம். டி.எஸ்.பியான இவர் தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
துரைப்பாக்கம் உதவி ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் துரைப்பாக்கத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் துணிகரமான முறையில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் படையில் இடம் பெற்றிருந்த டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் இங்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் பாதுகாப்புப் படை டிஎஸ்பியாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் எஸ்.பியும் மாற்றம்
இதேபோல சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோட்னிஸ் அஸ்வின் முகுந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புனித தாமஸ் மலை காவல் துணை ஆணையராக ஏ.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி. எஸ்.பியாக எம்.எஸ். முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளர் மாற்றம்
இதேபோல வருவாய்த்துறை செயலாளராக இருந்து வந்த ராஜகோபால் மாற்றப்பட்டு உள்துறைச் செயலாளராகியுள்ளார்.
இதுவரை உள்துறைச் செயலாளராக இருந்து வந்த ரமேஷ் ராம் மிஸ்ரா வருவாய்த்துறைக்குச் செயலாளராகியுள்ளார்.












Click it and Unblock the Notifications