பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண் !
மேட்டுப்பாளையம் : பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று சரண் அடைந்தனர்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், கடந்த 10 -ந் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12 -ந்தேதி அன்று நெல்லை மாவட்டம் இடையர்தவணையை சேர்ந்த ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராஜபாளையம் அருகே உள்ள மூகவூரைச் சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி, மற்றும் பிரபு ஆகிய இருவரும் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதனையடுத்து அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு பேர் சரண் அடைந்த நிலையிலும் பசுபதிபாண்டின் கொலை வழக்கில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்ந்தபாடு இல்லை என்று பரவலான தகவல்கள் உள்ளது.