சமாஜ்வாதிக்கு ஓட்டு போடச்சொல்வதா? டெல்லி இமாமுக்கு காங். கண்டனம்
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்குமாறு டெல்லி ஜும்மா மசூதி இமாம் ஷாகி இமாம் புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் புகாரியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, முலாயம்சிங்குடன் முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முஸ்லிம்களுக்கான உரிய நீதி கிடைக்க சமாஜ்வாதிபாடுபடும் என்று அவர் உறுதியளித்துள்ளார். ஆகையால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களும் மதச்சார்பற்ற சக்திகளும் சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்று புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புகாரியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
''டெல்லி இமாம் ஒரு மதவாதி. அவர் ஒசாமா பின்லேடனை ஆதரித்தவர். 2004-ல் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பட்வா பிறப்பித்தவர்"என்று திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
மேலும், புகாரியின் வேண்டுகோளானது உத்தரப்பிரதேச முஸ்லிம்களை தவறாக வழிநடத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான கல்யாண்சிங்குடன் கை கோர்த்து தமது மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றவர் முலாயம்சிங் என்றும் திக்விஜய்சிங் சாடியுள்ளார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக உத்தர்ப்பிரதேச அரசுக்கு மத்திய அரசு ரூ8,500 கோடி நிதி ஒதுக்கியது. இதில் ரூ5 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை என்றும் மாயாவதி அரசை அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications