2ஜி: பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான சாமியின் மனு ஏற்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

Subramaniam Swamy
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை வழக்கு தொடர அனுமதி கோரிய சாமிக்கு பிரதமர் அலுவலகம் கால தாமதாக பதில் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல் செய்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி சாமி கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் ஒன்றரை ஆண்டுகளைக் கடத்தினர். இதயைடுத்து 2ஜி வழக்கில் அரசு அனுமதி வழங்க உத்தரவிடுமாறு சாமி கடந்த 2010ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி தான் பிரதமர் அலுவலகம் சாமி்க்கு பதில் அளித்தது. 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருப்பதால் வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள் சிபிஐ ராசாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

இதையடுத்து ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரியது தொடர்பாகவும், கால தாமதம் ஏற்பட்டதால் உரிய விதிமுறைகள் கொண்டு வருவது குறித்தும் சாமி உச்ச நீதிமன்றத்தில் வழ்ககு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது 2ஜி ஊழல் விவகாரத்தில் 16 மாத காலமாக ஆ. ராசாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் பிரதமர் எடுக்காதது ஏன் என்று மத்திய அரசின் சட்ட அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. சூடான விவதாதத்திற்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஏ.கே. கங்குலி வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஓய்வு பெறுவதால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான சாமியின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

பொதுச்சேவையில் உள்ள அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் விஷயத்தில் ஒரு காலவரையறை இருக்க வேண்டும்.

எந்த புகார்கள் மீது அனுமதி கேட்டாலும் வழக்கு தொடர்வதற்கு வசதியாக 3 மாதங்களுக்குள் அனுமதி கொடுக்கப்பட வேண்டும். அனுமதி கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டியதிருந்தால் மேலும் ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

4 மாதங்களுக்குள் கண்டிப்பாக வழக்கு தொடர அனுமதி கொடுக்கப்பட வேண்டும். அப்படி 4 மாதங்களுக்குள் அனுமதி கொடுக்கப்படாவிட்டால், 4-வது மாதத்துக்கு பிறகு அரசு அனுமதி கொடுத்து விட்டதாகக் கருதப்படும். இது தொடர்பான விதிமுறைகள் வகுப்பதை பாராளுமன்றம் முடிவு செய்து கொள்ளலாம்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொதுச்சேவையில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர்வது என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். இதில் அரசு அனுமதி கொடுப்பதில் தாமதம் செய்வதை ஏற்க இயலாது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே பிரதமருக்கு உத்தரவிட இயலாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சாமி கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இனி சாதாரண குடிமகன் கூட எளிதில் பிரதமரை அணுக முடியும். இந்த தீர்ப்பு ஊழலை ஒழிக்க பாடுபடுவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

இந்த தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது கிட்டத்தட்ட வெகு எளிதாக மாறும் எனத் தெரிகிறது. காரணம், யார் மீதாவது இனி யாராவது புகார் கூறினால், அதுகுறித்து 3 மாதங்களுக்குள் உரிய அதிகாரிகள் பதிலளித்தாக வேண்டும்.இல்லாவிட்டால், தானாகவே கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட பாதி ஜன் லோக்பால் அளவுக்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+