மாஜி திமுக மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமு மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவைச் சேர்ந்தவருமான என்.வி.என். சோமுவின் மனைவி உமாதேவி மீது நில அபகரிப்பு வழக்குப ப்திவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள கும்மனூர் கிராமத்தை சேர்ந்த து.முனுசாமி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,
நான், 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி கும்மனூர் கிராமத்தில் 85 சென்ட் நிலத்தை துரைபாபு என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். 2005-ம் ஆண்டு என் பெயரில் பட்டா மாறுதல் செய்து, இதுவரை எந்தவித வில்லங்கமும் இல்லாமல் அனுபவித்து வருகிறேன்.
1994-ம் ஆண்டு முதல் நிலவரி மற்றும் அரசு விதிக்கும் வரிகளை செலுத்தியும், சிட்டா, அடங்கல் ஆகியவற்றை என் பெயருக்கு வாங்கியும் அனுபவித்து வருகிறேன்.
இந்த நிலையில், 2005-ம் ஆண்டு நான்கு வழி சாலை அமைப்பதற்காக 85 சென்ட் நிலத்தில், 3 சென்ட் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டு நஷ்டஈடு கொடுத்தது. அதன்பின்னர் 82 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்த பிழைத்து வருகிறோம். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜுன் 2-ந் தேதி உமாதேவியின் சொந்தக்காரர்கள் என்று கூறிக் கொண்டு, என்னுடைய நிலத்தில் வந்து மேற்படி நிலமானது 1989-ம் ஆண்டில் இருந்து தங்களுக்கு பாத்தியப்பட்டது என்று சொல்லி என்னை மிரட்டினார்கள்.
அதனால் எனக்கு நிலத்தை விற்ற துரைபாபுவிடம் சென்று முறையிட்டபோது, உன்னை மிரட்டியவர்கள் எனக்கு தெரிந்தவர்கள்தான், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், இனிமேல் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் என்மீது உமாதேவி பொய் புகார் கொடுத்தார்.
என் மீது புகார் கொடுத்துள்ள உமாதேவியின் கணவர் முன்னாள் மத்திய அமைச்சரான என்.வி.என்.சோமு ஆவார். நான்கு வழிச்சாலை அமைப்பதாலும், நிலத்தின் மதிப்பு அதிகரித்து இருப்பதாலும், துரைபாபுவும், அவருடைய நெருங்கிய நண்பர் என்.வி.என்.சோமுவின் மனைவி உமாதேவி குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து என்னை ஏமாற்றி, என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு (நில அபகரிப்பு) போலீசில் நான் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி மதிவாணன், மனுதாரர் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு (நில அபகரிப்பு) போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். 6 வாரத்திற்குள் இந்த வழக்கு விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் 6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications