கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது இந்து முன்னணியினர் திடீர் தாக்குதல்- பதட்டம்- 10 பேர் கைது!

கூடங்குளம் அணு உலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுடன் மத்திய அரசு அமைத்த குழு இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. இதற்காக 12பேர் கொண்ட அரசு குழுவினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகளுடன் இடிந்தகரையைச் சேர்ந்த 50-க்கு மேற்பட பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.
அப்போது நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான ஒரு குழுவினரும் அங்கு வந்தனர்.
நாட்டுக்கு அவசியமான அணு உலையை எதிர்க்கும் தேச துரோகிகளுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறில் தொடங்கிய மோதல் வன்முறையாக மாறியது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வந்த வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. அவர்கள் மீது காலணிகளும் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுமார் 20 நிமிட நேரம் நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் போர்க்களமாக மாறியது. இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
மறியல் போராட்டம்
தாக்குதலை நடத்தியோரை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடங்குளம் போராட்டக் குழுவினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இனி மத்திய அரசு அமைத்துள்ள குழுவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு கூடங்குளத்துக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
பேச்சுவார்த்தை புறக்கணிப்பு
கூடங்குளம் போராட்டக்குழுவினர் தாக்குதலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையைப் புறக்கணித்து விட்டு வெளியேறியதால், 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
மேலும் தங்களை இந்து முன்னணியினருடன் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தாக்கியதாக போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
10 பேர் கைது
இதனிடையே இத்தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்திருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருணாசாகர் தெரிவித்துள்ளார்.
மத்திய குழுவுடன் கலெக்டர் ஆலோசனை
தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த மத்திய குழுவுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் அவசர ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த விவரம் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications