கனடாவிலிருந்து பிரபுல் படேலை நோக்கி ஒரு 'குண்டு'-லஞ்சம் வாங்கியதாக வழக்கு!

விமான நிலையங்களில் பயோமெட்ரிக் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, பிரபுல் படேலுக்கு கனடா வாழ் இந்தியரான நஸீர்காரிகார் என்பவர் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் லஞ்சமாக கொடுத்தார் என்பதுதான் புகார். இத்தகவலை குளோப் அண்ட் மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
செய்தி வெளியிடுவதற்கு முன்பாக பிரபுல் படேலிடமும் அதன் செய்தியாளர் கருத்து கேட்டிருந்தார். தம்மீதான குற்றச்சாட்டுகளை பிரபுல் படேல் மறுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்றையும் பிரபுல் படேல் அனுப்பியுள்ளார். அதிலும் தம் மீதான புகார் ஆதாரமற்றது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பிரபுல்பட்டேல். விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகளை அடையாளம் காட்டுவதற்காக பையோமெட்ரிக் முறையில் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதற்காக ஏர்இந்தியா நிறுவனம் , கனடாவைச் சேர்ந்த க்ரைப்டோமெட்ரிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் இடைத்தரகாக இருந்தவர்தான் நஸீர்காரிகார்.
இந்த ஒப்பந்த விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த லட்சுமண் தோபலுக்கும் தொடர்பிருப்பதாக குளோபல் அண்ட் மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது, கனடாவின் ஒட்டாவா நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் நஸீர்காரிகாரை விசாரணைக்குட்படுத்தவும் கனடா நாட்டு காவல்துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications