புயல் நிவாரண நிதி பெற்றுத் தருவதில் ப.சிதம்பரம் பாராமுகம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அதன் விவரம்:
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): தானே புயல் தமிழகத்தை தாக்கியதில் ஏராளமான சேதம் ஏற்பட்டு விட்டது. இதற்கு நிவாரண உதவியாக ரூ.5,000 கோடி தருமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. ஆனால், வெறும் ரூ.500 கோடி மட்டுமே மத்திய அரசு தந்துள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொறி போட்டது போல் உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா: தானே புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கிய இந்த ரூ.500 கோடியும் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?. புயல் தாக்கியதும் தமிழக அரசு நிவாரண பணிகளை முழுவேகத்துடன் தொடங்கியது. அப்போது தமிழகத்திற்கு உதவுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அவர்களிடம் இருந்து பதிலே இல்லை. இந்த ரூ.500 கோடியையும் அவர்கள் உடனே தரவில்லை. பலமுறை வலியுறுத்தி கேட்டும் கிடைக்காததால் மாநில அரசே ரூ.850 கோடி ஒதுக்கி முழுவீச்சில் பணியை தொடங்கினோம்.
இது தவிர புயல் நிவாரண உதவிக்கு நிதி வழங்கி உதவுமாறு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தோம். அதில் புயல் நிவாரண நிதிக்கு வாரி வழங்குமாறு கேட்டுக் கொண்டோம். இது எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்தது. அதைப் பார்த்து வெட்கப்பட்டோ என்னவோ மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கியது.
ரங்கராஜன் (காங்கிரஸ்): பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தது போல் இந்த தொகையை முதல் கட்டமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. நாங்களும், தமிழக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டிருக்கிறோம்.
முதல்வர் ஜெயலலிதா: பாவம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். இந்த அவையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களை நான் குறை ஏதும் சொல்லவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?.
தமிழக மக்கள் வாக்களித்து வெற்றி பெற்று இந்த அவைக்கு வந்திருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள், சொல்வார்கள். ஆனால் மத்திய அரசில் இருப்பவர்களும் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சர்களாக இருக்கும் ப.சிதம்பரம் போன்றவர்கள் பாராமுகமாக இருக்கிறார்களே. அதைத் தான் நான் சொல்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications