மிலாடி நபி: ஜெயலலிதா, கருணாநிதி, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாடி நபி இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மிலாடி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளாம் மிலாது நபி உலகம் எங்கும் மகிழ்வுடன் கொண்டாடப்படும் இந்த இனியவேளையில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழ வேண்டும் என்பது அண்ணல் நபிகளின் அருட்போதனை ஆகும்.
பெருமானார் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பெருமானாரின் போதனைப்படி, அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக்கூறி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி' நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.