ஆளில்லா சூட்கேஸால் அல்லோகல்லோலப்பட்ட சென்னை விமான நிலையம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். அவர் இன்று மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருவதாக இருந்தது. அவர் வருவதற்கு சில நிமிடங்கள் இருக்கையில் விமான நிலையத்தில் ஆளில்லா சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சூட்கேஸில் வெடிகுண்டு இருக்கிறதோ என்று பயந்துவிட்டனர்.
உடனே அங்குள்ள அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து அந்த சூட்கேஸை எடுத்துச் சென்று சோதனையிடச் செய்தனர். சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. யாரோ பயணி ஒருவர் மறந்துபோய் விட்டுச் சென்றுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தால் சிறிது நேரம் விமான நிலையம் அல்லோகல்லோலப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications