இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவு அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சபீர் அலி முதல்வரின் தனிப் பிரிவில் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சிலரது தூண்டுதலின் பேரில் உதயகுமார் என்பவர் தலைமையில் தினசரி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
உதயகுமார் வெளிநாட்டு நிர்பந்தத்தின் பேரில் கூடங்குளம் அணுஉலை இயக்கப்படுவதை தடுத்து வருகின்றார். மேலும் அவர் அங்கு பல்வேறு சட்ட விதிமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். இதனால் போலீசார் உதயகுமார் மீது 164 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உதயகுமார் மக்களை குழப்புவதோடு, நாட்டுக்கு எதிராகப் பேசியும், செயல்பட்டும் வருகின்றார். இதனால் மக்களுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் அவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications